

திருவாரூர்:
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் கடந்த 2015-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தற்போது இறுதி ஆண்டு மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதையடுத்து இறுதி ஆண்டு மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்களின் பயிற்சி நாட்களை 2016-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்கள் தேர்வு முடிந்து பணியில் சேரும் வரை நீட்டிப்பதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்கள் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மருத்துவ கல்லூரியிலும் நேற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் உடனடியாக பணி நிறைவு சான்றிதழ் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.