அமெரிக்காவில் மகள், மாமியாரை சுட்டுக்கொன்ற இந்தியர்

அமெரிக்காவில் தனது மகளையும், மாமியாரையும் சுட்டுக்கொன்ற இந்தியர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஸ்கோடாக் நகரை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் (வயது 57). இவரது 14 வயது மகள் ஜஸ்லீன் கவுர். இவரது மாமியார் மன்ஜித் கவுர் (53).

இந்த நிலையில் சம்பவத்தன்று பூபிந்தர் சிங் வீட்டில் இருந்தபோது அவருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பூபிந்தர் சிங் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.

இதில் பூபிந்தர் சிங்கின் மகள் ஜஸ்லீன் கவுரும், மாமியார் மன்ஜித் கவுரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த வீட்டில் இருந்த ராஸ்பல் கவுர் என்ற 40 வயது பெண் ஒருவரும் படுகாயம் அடைந்தார்.

இவர் பூபிந்தர் சிங்குக்கு என்ன உறவு என்பது பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் இவர் கையில் குண்டு காயத்துடன் வீட்டில் இருந்து தப்பி ஓடி உயிர்பிழைத்தார்.

இதனைத் தொடர்ந்து பூபிந்தர் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே பூபிந்தர் சிங்கின் கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த அந்த பெண் போலீசாரால் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கான பின்னணி குறித்து நியூயார்க் மாகாண போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com