

செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கேசவபுரம் அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மகள் கஸ்தூரி (வயது 20). இவருக்கும், புளியங்குடி பகுதியை சேர்ந்த முப்புடாதி என்பவர் மகன் கண்ணன் (35) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்ற நிலையில் 2-வதாக கஸ்தூரியை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே, கண்ணனுக்கும், அவரது மனைவி கஸ்தூரிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கஸ்தூரி, கணவரிடம் கோபித்துக்கொண்டு கீழப்புதூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணன், மனைவியை பார்த்து அழைத்து செல்ல கீழப்புதூருக்கு வந்தார். அப்போது கஸ்தூரி வேலைக்கு சென்று இருந்தார். எனவே அவரது வருகைக்காக கண்ணன் காத்திருந்தார்.
வேலைக்கு சென்று விட்டு மாலையில் கஸ்தூரி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வீட்டுக்கு வரும் பாதையில் சாலையின் ஓரத்தில் இரண்டு லாரிகளுக்கு இடையே இருசக்கர வாகனத்தில் கண்ணன் மறைந்து இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கஸ்தூரியை, கண்ணன் இருசக்கர வாகனத்தில் சென்று மோதி கீழே தள்ளி கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து கண்ணன் தப்பிச் சென்றுவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.