

திருப்பதி:
கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் திருப்பதியில் தேவஸ்தானம் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
கடந்த மாதம் இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும் ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் ஏப்ரல் 30-ந்தேதி வரை தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால் 50 சதவீதம் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தும் வராமல் உள்ளனர். கொரோனா பரவல் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் திருப்பதி வருவதை தவிர்த்து வருகின்றனர்.
நேற்று 23,998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.85 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது.
வழக்கமாக திருப்பதியில் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்வார்கள். உண்டியல் வருமானமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வசூலாகும். தற்போது பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் உண்டியலில் வருமானமும் ரூ.1 கோடிக்கு கீழ் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடிக்கு கீழ் குறைந்தது. அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணத்தால் மீண்டும் உண்டியல் வருமானம் ரூ.1 கோடிக்கு கீழ் சரிந்துள்ளது.