

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே கடந்த 12-ந்தேதி பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கார் வந்தது. அதை பறக்கும் படையினர் நிறுத்தி உள்ளனர்.
அப்போது காரில் இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பறக்கும் படை குழு அதிகாரியை மிரட்டியதாக நாலாட்டின்புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கடம்பூர் ராஜூ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நான் பிரசாரம் செய்வதற்கு தடை ஏற்படுத்தும் நோக்கத்தில் எனது காரை வழி மறித்தனர். ஆனால் பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாக தவறான தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கணக்கு காட்டும் நோக்கிலும், என் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும் இந்த புகார் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது அரசியல் ரீதியாக பதியப்பட்ட வழக்கு. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கக் கூடிய நிபந்தனைகளுக்கு மனுதாரர் கட்டுப்படுவார் என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு நிபந்தனை இன்றி முன் ஜாமீன் வழங்கலாம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதே போல இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 506(1) கீழ் பதியப்படும் வழக்குகளில் இதே நிலைப்பாட்டை அரசு எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.