நகைக்காக மூதாட்டி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

பரமத்திவேலூர் அருகே நகைக்காக மூதாட்டியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தினேஷ்குமார்
தினேஷ்குமார்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 83). இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி அங்குள்ள விவசாய கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து அவரது மகள் கமலம் பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3¼ பவுன் நகையை பறித்த அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (24), மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து கிணற்றில் தள்ளி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட தினேஷ்குமாரை போலீசார் கோவை சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். கொலை செய்யப்பட்ட பழனியம்மாளும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட தினேஷ்குமாரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com