

சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக வகுப்புகள், தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்தநிலையில் புதிய கல்வியாண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது தொடங்குவது? என்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர் சேர்க்கை தொடங்குவதில் தாமதமாகி உள்ளது.
கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அதே போல இந்த வருடமும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் வினியோகம் மற்றும் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தொற்று பாதிப்பு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவதாலும், மாணவ-மாணவிகளை கல்லூரிகளுக்கு அழைத்து விண்ணப்பம் வழங்குதல், சேர்க்கை பணிகளை மேற்கொண்டால் தொற்று மேலும் பரவக்கூடும் என்பதாலும் ஆன்லைன் வழியாக மாணவர்களை சேர்ப்பதற்கான ஆயத்த பணிகளை கல்லூரிகள் செய்து வருகின்றன.
பிளஸ்-2 மதிப்பெண் நிர்ணயம் செய்யும் பணி ஒரு சில நாட்களில் நிறைவடைய இருப்பதால் அதனை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை உயர் கல்வித்துறை வெளியிட உள்ளது. மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தவாறே ஆன்லைனில் விண்ணப்பித்து விரும்பிய கல்லூரிகளில் சேரலாம்.
அரசு கல்லூரிகளைப் போன்று தனியார் கல்லூரிகளும் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடத்த தயாராகி வருகின்றன. சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரிளில் சேர்க்கப்படுவார்கள். அதற்கான கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படும். எனவே இன்னும் ஒரு சில நாட்களில் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.