சிறுமிக்கு பாலியல் தொல்லை: சென்னையை சேர்ந்தவருக்கு 3 ஆண்டு சிறை

ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சென்னையை சேர்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சேலம்:

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் (வயது 41). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்தார். இந்த ரெயில் சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது அதே பெட்டியில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நரேந்திரனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக நரேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com