சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது
கைது
Published on

வடமதுரை:

வடமதுரை நாடுகண்டானூர் பிரிவு அருகே உள்ள தனியார் நூற்பாலை விடுதியில் 17 வயது சிறுமி தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களாக இந்த சிறுமியை காணவில்லை. இதுதொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் நூற்பாலையில் வேலை பார்த்த நாகன்களத்தூரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 25) என்பவரை சிறுமி காதலித்து வந்ததும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்பாலை விடுதியிலிருந்து தப்பித்து ஆறுமுகத்துடன் அவர் சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வையம்பட்டி அருகே குமரவாடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த ஆறுமுகம் மற்றும் சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை கடத்தி சென்ற ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com