

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா சிறுவானூரை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கடந்த வாரம் அந்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். இருப்பினும் சிறுமிக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
இதனால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமிக்கு டாக்டர் ஸ்கேன் செய்து பார்த்தபோது 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வாசுதேவனின் மகனான சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வரும் புஷ்பராஜ் (22) என்பவரும் தானும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஆசைவார்த்தை கூறி சிறுமியை புஷ்பராஜ் உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் புஷ்பராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற புஷ்பராஜை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.