

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இதேபோல் கன்னியாகுமரி வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், சிலுவை நகர், கீழ மணக்குடி, பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். அதன்படி வள்ளம் மீனவர்கள் அதிகாலை மீன்பிடிக்க சென்று விட்டு காலை 8 மணிக்கு கரை திரும்புவார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை கன்னியாகுமரி, கோவளம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து பாறைகளில் ஆக்ரோஷமாக மோதி சிதறியது. இதனால் கடல் சீற்றம் காரணமாக கோவளத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன் பிடிக்கச் செல்லவில்லை. மேலும், தங்களது படகுகளை கடற்கரையில் மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் கோவளம் மீன்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த விசைப்படகுகள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.