முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
வளர்ப்பு யானைகளுக்கு வனத்துறையினர் உணவுகள் வழங்கியபோது எடுத்த படம்.
வளர்ப்பு யானைகளுக்கு வனத்துறையினர் உணவுகள் வழங்கியபோது எடுத்த படம்.
Published on

கூடலூர்:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம் உள்பட முக்கிய நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் பொங்கல் விழாவை நேற்று மாலை 6 மணிக்கு கொண்டாடினர்.

இதையொட்டி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிப்பாட்டப்பட்டது. பின்னர் தெப்பக்காடு முகாமுக்கு அழைத்து வரப்பட்டு சந்தனம், குங்குமிட்டு அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து வளர்ப்பு யானைகளை பாகன்கள் வரிசையாக நிறுத்தி வைத்தனர். பின்னர் முகாம் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் வனச்சரகர்கள் தயானந்தன், காந்தன், மனோஜ் குமார், சிவகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், கரும்பு, ஆப்பிள், வெல்லம், தேங்காய், ராகி கட்டிகள் உள்ளிட்ட விசேஷ உணவுகள் வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்பட்டது.

இதை தமிழகம் கேரளா கர்நாடகா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் பொங்கல் வழங்கினர். இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டது கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com