

கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அழகிய தீவுகள் உள்ளன. 2010-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி கீழக்கரை அருகே பெரிய பட்டினத்தில் இருந்து பாதுகாப்பின்றி முல்லை தீவுக்கு சுற்றுலா சென்ற போது படகு கவிழ்ந்து 16 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் மீண்டும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, சேதுக்கரை உள்ளிட்ட கடல் பகுதியில் நாட்டு படகுகளில் சட்டத்திற்கு புறம்பாக பாதுகாப்பின்றி சிலர் தீவுகளுக்கு செல்கின்றனர். இந்த படகுகளில் செல்லும் நீச்சல் தெரியாதவர்கள் விபத்தில் சிக்கினால் அவர்களை பாதுகாக்க வேண்டிய எவ்வித உபகரணங்களும் இல்லாத நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.
வனத்துறையின் அனுமதியின்றி இது போன்ற சட்ட விரோதமான பயணத்தின் மூலம் தீவுகளுக்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து கீழக்கரை சரக வனத்துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், சட்ட விரோதமாக தீவுகளுக்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறி யாரேனும் செல்வதாக தகவல் தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கலாம். வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.