தீபாவளி பண்டிகை- தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

தீபாவளி பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பிச்சி, முல்லை, கனகாம்பரம் போன்ற பூக்கள் தலா கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.
பூக்கள் விலை உயர்வு
பூக்கள் விலை உயர்வு
Published on

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு பூக்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. தினமும் அதிகாலையிலேயே பூக்கள் கொண்டு வரப்படுவதால் அதை வாங்கி செல்ல ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் கூடுவார்கள். பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக பண்டிகை நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கும்.

கொரோனா பரவல் ஊடரங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பூக்களின் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால், பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து வந்தனர். தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் பூ விற்பனை சூடு பிடித்துள்ளது.

நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நேற்று தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.500-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.500 உயர்ந்து ரூ.1000-க்கு விற்பனையானது. இதுபோல் முல்லை ரூ.500-ல் இருந்து ரூ.1000 -ஆகவும், கனகாம்பரம் ரூ.750-ல் இருந்து ரூ.1000-ஆகவும் ரூ. 80-க்கு விற்பனையான அரளிப்பூ கழனி ரூ.170 ஆகவும் உயர்ந்தது.

தோவாளை மார்க்கெட்டில் பிற பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

மல்லிகை ரூ.800, வாடாமல்லி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.120, சம்பங்கி ரூ.150, ரோஜா (100 எண்ணம்) ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.270, துளசி ரூ.40, தாமரை (100 எண்ணம்) ரூ. 500, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.70, கொழுந்து ரூ.120, மருக்கொழுந்து ரூ.150, மஞ்சள் கேந்தி ரூ.85, மஞ்சள் சிவந்தி ரூ.250, வெள்ளை சிவந்தி ரூ.250, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.200 என விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com