எரிபொருள் பற்றாக்குறை... இந்திய குத்துச்சண்டை அணி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

துபாயில் ஸ்பைஸ்ஜெட் விமானம் எரிபொருள் பற்றாக்குறையால் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது.
ஸ்பைஸ்ஜெட் விமானம்
ஸ்பைஸ்ஜெட் விமானம்
Published on

துபாய்: 

துபாயில் வரும் திங்கட்கிழமை தொடங்கி வரும் ஜூன் 1ம் தேதி வரை ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, மேரி கோம் உள்ளிட்ட இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் இன்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் புறப்பட்டுச்சென்றனர்.

அந்த விமானம் துபாய் சென்றடைந்தபோது, தரையிறங்க உடனடியாக அனுமதிக்காததால் தாமதம் ஏற்பட்டது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீண்ட குழப்பங்களுக்கு பிறகு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறை என தகவல் அளித்து அரைமணி நேரத்திற்கு பிறகே துபாயில் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது.

இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரி கூறுகையில், ‘ஆரம்பத்தில் விமானத்த தரையிறக்க அனுமதி வழங்கவில்லை, காத்திருக்கும்படி கூறப்பட்டது. இதனால் அருகில் உள்ள ராஸ் அல் காய்மா விமான  நிலையத்திற்கு திரும்பிச் சென்று தரையிறங்க அனுமதிக்கும்படி பைலட்டுகள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அமீரகத்தில் உள்ள எந்த விமான நிலையத்திலும் தரையிறங்க அனுமதி இல்லை என்று கூறி உள்ளனர். பின்னர், எரிபொருள் குறைவாக இருப்பதை விமான கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தெரிவித்ததால் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. எரிபொருள் அவசரம் என்ற அடிப்படையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதுபற்றி பைலட்டுகளிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது’ என்றார்.

ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘விமானம் பாதுகாப்பாக துபாயை அடைந்துள்ளது. அனைத்து பயணிகளும் சோதனையை முடித்துள்ளனர். விமானம் மற்றும் பயணிகள் தொடர்பான சரியான ஆவணங்களை எடுத்துச் செல்லப்பட்டன. இந்த விமானம் சரக்கு விமானமாக பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு வெளியான தகவல் முற்றிலும் தவறானது. இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் வழக்கமாக பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. இதே விமானம் துபாயில் இருந்து பயணிகளை ஏற்றி வருகிறது’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com