தூத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட மேலும் 5 பேர் கைது

தூத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை- மகன்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தூத்தூர் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 46). விவசாயி. இவருடைய மனைவி சுலோச்சனா. இந்த தம்பதிக்கு கவியரசன், அரவிந்த் என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் காதல் விவகாரம் தொடர்பாக கண்ணன் குடும்பத்திற்கும், அதே ஊரை சேர்ந்த நாகராஜனின் மகன் அஜித்தின்(19) குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கண்ணன்-சுலோச்சனா தம்பதி, பாதுகாப்பு கேட்டு தூத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் உறவினர்களோடு வைப்பூரில் உள்ள மீன் குட்டையில் மீன் வாங்க சென்ற கண்ணனை, அஜித்குமாரின் அண்ணன் அருண்மோகன்(27) கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அருண்மோகனை தா.பழூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தா.பழூர் செல்லியம்மன் கோவில் மற்றும் எமனேரி பகுதிகளில் 2 குழுக்களாக பிரிந்து சுற்றிக் கொண்டிருந்த நாகராஜன்(56), அவருடைய மகன்கள் வினோத்குமார் (31), விஜய் (21), அஜித், உறவினர் பரமசிவம் மகன் முத்து (31) ஆகியோரை தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com