

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் உடன்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உடன்குடி பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து அரசு நிர்ணயித்த நேரத்தை விட மற்ற நேரங்களில் கூடுதல் விலைக்கு பதுக்கி வைத்து விற்பனை வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் கூலையங்குண்டு விலக்கு ரோடு பகுதியில் காட்டுப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டுப்பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த செம்மறிக்குளத்தை சேர்ந்த குமார் (வயது 53) , சந்தையடியூர் கொடிக் கால் பகுதியில் மது விற்பனை செய்த வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த குமார் (39) , குலசேகரன்பட்டினம் தருவைகுளம் இசக்கியம்மன்கோவில் பகுதியில் மது விற்பனை செய்த குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த நாராயணன் (53) , உடன்குடி ஐ.ஓ.பி. பின்புறம் காட்டுப்பகுதியில் வைத்து மது விற்பனை செய்த உடன்குடி சோமநாதபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (29) , வில்லிகுடியிருப்பு வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு பின்புறம் வைத்து மது விற்பனை செய்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்லையா (55) ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 8 பாட்டில்கள் வீதம் 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.