கோத்தகிரி பகுதியில் இயற்கை உரமிட்டு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
கோத்தகிரியில் உள்ள ஒரு விளைநிலத்தில் இயற்கை உரமிடப்பட்டுள்ள காட்சி.
கோத்தகிரியில் உள்ள ஒரு விளைநிலத்தில் இயற்கை உரமிடப்பட்டுள்ள காட்சி.
Published on

கோத்தகிரி:

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிடுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் நிலங்களை பதப்படுத்தி விவசாயம் மேற்கொள்ளாமல் தரிசாக விட்டு வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு குறைந்து நல்ல சீதோஷ்ண காலநிலை நிலவி வருவதால், பதப்படுத்தி தயாராக வைத்திருந்த நிலங்களில் இயற்கை உரங்களை இட்டு மீண்டும் விவசாயம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோத்தகிரி பாண்டியன் பூங்கா பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் கூறியதாவது:-

பனிப்பொழிவின் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால், கடந்த 2 மாதங்களாக விவசாயம் செய்யாமல் இருந்தோம். தற்போது நல்ல காலநிலை நிலவுவதால், மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டி, ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகிறோம். தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com