பெங்களூருவில் குடும்ப பிரச்சனையில் பெண் சுட்டுக்கொலை

பெங்களூருவில் குடும்ப பிரச்சனையில் பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கணவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு:

பெங்களூரு பசவேசுவராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிர்லோஷ்கர் காலனி, 6-வது கிராசில் வசித்து வருபவர் காலப்பா (வயது 63). இவரது மனைவி சுமித்ரா (60). தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் காலப்பா பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சனை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுபத்ரா கோபித்து கொண்டு தன்னுடைய மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் நேற்று முன்தினம் காலையில் தான் அவர் மகள் வீட்டில் இருந்து திரும்பி வந்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகவும் காலப்பா, சுபத்ரா இடையே வாக்குவாதம் உண்டானது. அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த காலப்பா வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி சுபத்ராவை சுட்டார். இதில், அவரது வயிற்றில் குண்டு துளைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

அதன்பிறகு, அதே துப்பாக்கியால் தன்னைதானே சுட்டுக் கொண்டு காலப்பாவும் தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி அறிந்ததும் பசவேசுவராநகர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று காலப்பாவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் சுபத்ராவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது காலப்பா, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. இதனால் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் வாகனங்களுடன் பாதுகாவலராக காலப்பா செல்வதால், அவருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது.

அந்த துப்பாக்கி மூலமாக மனைவி சுபத்ராவை கொன்றுவிட்டு காலப்பாவும் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், அதுபோல நேற்று முன்தினம் உண்டான சண்டையில் தனது மனைவியை காலப்பா சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது. இதற்கிடையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் காலப்பா சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பசவேசுவராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com