போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்கள் பணி நீக்கம்

தஞ்சை மாவட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பணி நீக்கம்
பணி நீக்கம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பனையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி வரலாறு ஆசிரியராக பணியாற்றியவர் வசந்தகுமார்(வயது 35). இதேபோல் வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் சவுந்தர்ராஜன்.

இவர்கள் இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இருவரின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிய, சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.

அங்கு ஆய்வு செய்யப்பட்டதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வசந்தகுமார், சவுந்தர்ராஜன் ஆகிய இருவரும் போலி சான்றிதழ்களை கொடுத்து கடந்த 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் உரிய விசாரணை நடத்தி 2 ஆசிரியர்களையும் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கி நேற்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து இரு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி போலீசில் புகார் அளிக்கவும், தொடர்ந்து அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி பெற்ற சம்பளத்தை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com