சூளகிரி தினசரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூல் - கலெக்டரிடம், கடைக்காரர்கள் மனு

சூளகிரி தினசரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் கடைக்காரர்கள் மனு கொடுத்தனர்.
சூளகிரி தினசரிசந்தை கடைக்காரர்கள் முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த காட்சி
சூளகிரி தினசரிசந்தை கடைக்காரர்கள் முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த காட்சி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் தலைமையில், சூளகிரியில் தினசரி சந்தையில் கடை வைத்துள்ள கடைக்காரர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சூளகிரியில் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை வளாகத்தில் 42 கடைகள் மற்றும் காலி இடத்தில் திறந்தவெளி கடைகள் அமைத்து அரசு நிர்ணயம் செய்த சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது சுங்கவரி வசூலிக்க ஏலம் எடுத்துள்ள குத்தகைதாரர், அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்கிறார்.

அதன்படி சந்தை கடைள், நடைபாதை கடைகள், தள்ளு வண்டி வியாபாரிகளிடம் ரூ.1 லட்சம் முன்பணம் மற்றும் தினமும் ரூ.200 சுங்கம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி வசூல் செய்கிறார். இதனால் வியாபாரிகள், கடைக்காரர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சந்தையின் குத்தகையை ரத்து செய்து, சாதாரண வியாபாரிகள் பயனடையும் வகையில் ஏலம் விட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷேக்ரசீத், மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பாக்கியராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்புசேகர் மற்றும் நிர்வாகிகள் சந்திரன், ராமச்சந்திரன், முருகேசன், மாதையன், சுஜவுல்லா, தனஞ்செயன், சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com