திருவொற்றியூரில் தடையை மீறி மனிதசங்கிலி போராட்டம்- எர்ணாவூர் நாராயணன் உள்பட 100 பேர் கைது

கண்டெய்னர் லாரிகளால் விபத்து ஏற்படுவதை தடுக்கக் கோரி திருவொற்றியூரில் தடையை மீறி மனிதசங்கிலி போராட்டம் நடத்திய எர்ணாவூர் நாராயணன் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
எர்ணாவூர் நாராயணன்
எர்ணாவூர் நாராயணன்
Published on

திருவொற்றியூர்:

மணலி விரைவு சாலையில் சத்தியமூர்த்தி நகர் மேம்பாலம் முதல் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் வரை துறைமுகங்களுக்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் விதிமுறையை மீறி போட்டி போட்டு முந்தி செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இதேபோல் சாலையின் இருபுறமும் கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி வைத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் அவசர தேவைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் வடசென்னை பொது நல சங்க தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து வட சென்னை பொது நல சங்கம் சார்பில் சத்தியமூர்த்தி நகர் முதல் ராமகிருஷ்ணா நகர் வரை 2 கிலோமீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் இன்று காலை தடையை மீறி சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கழக இளைஞரணி செயலாளர் கே.எஸ்.ஆர். பிரபு- மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து- பொருளாளர் கண்ணன்- துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே அனுமதியின்றி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதாக எர்ணாவூர் நாராயணன் உள்பட 100-க்கு மேற்பட்டவர்களை எண்ணூர் போலீசார் கைது செய்தனர். அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com