

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தினுள் நேற்று மாலை முதியவர் ஒருவர் தனது 2 கைகளையும் பிளேடால் கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள் என்று ஓடிவந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் தாலுகா போலீசார், அந்த முதியவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் செஞ்சி அருகே சிட்டாம்பூண்டியை சேர்ந்த பெருமாள் (வயது 60) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறுகையில், தன்னை எனது குடும்பத்தினர் அடித்து துன்புறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
இதையடுத்து பெருமாளை ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.