

திண்டுக்கல்:
திண்டுக்கல் சாலை ரோட்டில் தனியார் கண் மருத்துவமனை அருகில் சாலையின் நடுவே நேற்று திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. வட்ட வடிவில் சுமார் 2 அடி ஆழத்தில் இந்த பள்ளம் உருவாகியுள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் தோன்றிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை ரோட்டில் தற்போது தான் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்டு சில வாரங்களிலேயே இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் சாக்கடை கால்வாய் ஏதேனும் இருந்திருக்கலாம். அதனை முறையாக மூடாமல் சாலை அமைக்கப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக அங்கு பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என்றனர்.