

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாடி அருகே உள்ள கண்ணுகாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் வேடியம்மாள் (வயது 18). பிளஸ்-2 படிப்பை முடித்துள்ளார். இவர் நேற்று தர்மபுரி சவுளூர் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை அவர் கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த ஒரு ரெயில் என்ஜின் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வேடியம்மாளை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.