

தஞ்சாவூர்:
தஞ்சை மராட்டிய மன்னர் குடும்பத்துக்கான மயானம் கைலாஷ் மகால் என்றும் ராஜாகோரி சுடுகாடு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மன்னர்கள், ராணிகள், அரச குடும்பத்தினர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பள்ளிப்படை என்கிற நினைவாலயங்கள் உள்ளன.
தற்போது மன்னர் குடும்பத்தினர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் இந்த நினைவு சின்னங்களை புனரமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கான பணியை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். இந்த நினைவாலயங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சிலர் ஆக்கிரமித்து குடியிருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த சின்னங்களை இடித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இது குறித்து இன்டாக் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘தஞ்சை ராஜாகோரி சுடுகாடு பகுதியில் மன்னர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த நினைவுச்சின்னங்கள் உள்ளன.
இந்த நினைவுச்சின்னங்களை, அதனை சுற்றி ஆக்கிரமித்துள்ளவர்களில் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கி அந்த கற்களை கொண்டு கட்டிடம் கட்டும் பணியை மேற்கொண்டு வருவது ஆச்சரியமளிக்கிறது. எனவே தஞ்சை மாவட்ட போலீசார் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும்’’ என்றனர்.