கைக்குழந்தையுடன் பட்டதாரி தம்பதி தீக்குளிக்க முயற்சி- திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு

வீட்டிற்கு செல்லும் பாதையில் குழிதோண்டி ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் பட்டதாரி தம்பதியினர் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பழனிசாமி மீது போலீசார் தண்ணீர் ஊற்றிய போது எடுத்த படம்.
மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பழனிசாமி மீது போலீசார் தண்ணீர் ஊற்றிய போது எடுத்த படம்.
Published on

திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வாசலில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுக்களை போட்டனர். இப்படி வந்்தவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கண்காணித்து வந்தனர்.

அப்போது கைக்குழந்தையுடன் வந்த ஒரு தம்பதியினர் திடீர் என தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றனர். இதனை பார்த்த போலீசார் பாய்ந்து வந்து 5 லிட்டர் மண்எண்ணெய் கேன் மற்றும் அவர்கள் கையில் வைத்து இருந்து பைகளை பறிமுதல் செய்தனர்.

அவர்களது உடலில் தண்ணீ்ர் ஊற்றி தனி இடத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா உன்னியூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (வயது31), அவரது மனைவி பிரியா (27), 2 வயது ஆண்குழந்தை ரித்திக் என தெரியவந்தது.

பழனிசாமி என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். பிரியா எம்.எஸ்சி. படித்து உள்ளார். பழனிசாமி என்ஜினீயரிங் படித்து முடித்ததும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவரது தந்தையும், அண்ணனும் இறந்ததை தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்து அவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் ஒரு வீட்டை கட்டி விவசாயம் செய்து வருகிறார்.

அவருடைய வீ்ட்டிற்கு செல்லும் பொது பாதையில் ஒரு ஊராட்சி தலைவர் மற்றும் அவரது ஆட்கள் குழிதோண்டி இருப்பதால் வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவிப்பதாகவும், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழை மற்றும் மரவள்ளி கிழங்குகளை வெளியே கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி அவர் தட்டிக்கேட்டபோது, அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியும், ஊரில் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாததால் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் பழனிசாமி கூறினார்.

இதனை தொடர்ந்து பழனிசாமி மற்றும் பிரியாவை கைக்குழந்தையுடன் போலீசார் கலெக்டரிடம் அழைத்து சென்றனர். கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என பழனிசாமி கண்ணீர் மல்க முறையிட்டார்.

உரிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்த கலெக்டர் இதுபோன்ற பிரச்சினைக்காக தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பது சரியான முடிவு அல்ல இனியும் இதுபோன்று செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.

பட்டதாரி தம்பதியினர் கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com