

கள்ளக்குறிச்சி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சின்னசேலம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் பங்காரம் கிராமத்தை சேர்ந்த பாலு(வயது 63) என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கே லாரி டியூப்பில் எரிசாராயம் வைத்திருந்ததையும் வீட்டின் அருகே 2 காலி கேன்கள் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பாலு வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் சந்தேகப்படும்படியான இடத்தை போலீசார் தோண்டி பார்த்தபோது அங்கு தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 39 வெள்ளை நிற கேன்களில் 1,365 லிட்டர் எரிசாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வெளியே எடுத்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாராய கேன்களை பார்வையிட்டனர். இதையடுத்து பாலு, இவரது மனைவி மலர்(55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து லாரி டியூப் மற்றும் கேன்களில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.