குண்டடம் பகுதியில் தொடர் மின் வெட்டால் பொதுமக்கள் அவதி

குண்டடம் பகுதியில் தொடர் மின் வெட்டால் பொதுமக்கள், குழந்தைகள் தூங்கமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மின் தடையை சரிசெய்ய கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

குண்டடம்:

குண்டடத்தை அடுத்த கொக்கம் பாளையம், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, அம்மாபாளையம் முத்துக்கவுண்டன்பாளையம் உட்பட பல்வேறு கிராமமக்களுக்கு குண்டடம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக சரிவர மின்வினியோகம் இல்லை. மேலும் கடந்த 3 நாட்களாக மதியம் 3 மணிக்கு நிறுத்தப்படும் மின்சாரம் மறுநாள் காலை 9 மணிக்கு மீண்டும் வருகிறது. இதனால் இரவில் பொதுமக்கள், குழந்தைகள் மின்சாரம் இன்றி தூங்கமுடியாமலும் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து குண்டடம் துணை மின் நிலைய அதிகாரி கூறும்போது, ‘மாதாந்திர பராமரிப்பின் போது இந்த மாதம் மின் கம்பிகளில் உரசும் தென்னை மட்டைகளை வெட்டாததாலும் ஆட்கள் பற்றாக்குறையினால் சரிவர பராமரிப்பு செய்யமுடியவில்லை. மேலும் இரவில் ஏற்படும் மின்தடையினை மறுநாள் காலையில் தான் சரி செய்யமுடியும்’ என்றார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டடம் பகுதியில் ஏற்படும் மின் தடையினை சரிசெய்து சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com