காளையார்கோவில் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

காளையார்கோவில் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். மருந்து, மாத்திரை இருப்பு இருக்கிறதா? என கேட்டறிந்தார்.
நாட்டரசன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
நாட்டரசன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
Published on

காளையார்கோவில்:

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பாகனேரி, காளையார்மங்கலம், நாட்டரசன்கோட்டை, மறவமங்கலம், சாத்தரசன்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டார்.

ஆய்வில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் உள்ள உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, மருந்துகள் வழங்கும் இடம், சிகிச்சை வழங்கும் இடம், பரிசோதனைக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதோடு பதிவேடுகளையும் அவர் பார்வையிட்டு நாள்தோறும் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறித்தும், மருந்துகளின் இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தொடர் நோய்க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து 2 மற்றும் 3 மாதங்கள் பரிசோதனைக்கு வரவில்லையென்றால் அவர்கள் குறித்து விவரம் அறிய வேண்டும். துணை சுகாதார நிலைய செவிலியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளிலுள்ள தொடர் நோயாளிகளுக்கான மருந்துகள், மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது துணை சுகாதார இயக்குனர் யசோதாமணி, மாவட்ட குழந்தை நல அலுவலர் ரெஜினா, தொற்றுநோய் மருத்துவ அலுவலர் நாகநாதன், பொதுப்பணித்துறை பொறியாளர் வான்மதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் செந்தில், ராகவேந்தர், சிட்டாள், உமா, ஆருன், கண்காணிப்பு அலுவலர் முருகேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com