அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
விண்ணப்பம்
விண்ணப்பம்
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டம் பணிக்கு செல்லும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலோ அல்லது சுயமாக தொழில் புரிபவராகவோ இருத்தல் வேண்டும்.

பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருசக்கர ஓட்டுனர் உரிமம் பெற்று இருத்தல் வேண்டும். பயனாளிகள் வாங்கும் இருசக்கர வாகனங்கள் 1.1.2018-ந் தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். 125 சி.சி. திறனுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். இந்திய வாகன சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வாகனமாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு சான்று, இருப்பிட சான்று, ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, பணிபுரிவது மற்றும் சுய தொழில் புரிவதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வி சான்று(குறைந்தபட்ச தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விதவை, ஆதரவற்ற மகளிர், 35 வயதுக்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்), மாற்றுத்திறனாளிகள் சான்று, இருசக்கர வாகனத்திற்கான விலை புள்ளி அல்லது விலை பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com