வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

இந்தாண்டிற்கான மாநில விருது வழங்கிட 18 வயதுக்கு உட்பட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்:

பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் மாநில விருது கடந்த 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் பெண்ணிற்கு தேசிய பெண் குழந்தை தினத்தன்று (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படும். அதன்படி இந்தாண்டிற்கான மாநில விருது வழங்கிட 18 வயதுக்கு உட்பட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், 4-வது மாடி ‘பி’ பிளாக், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கலெக்டர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com