

நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை-அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட (பி.சி.), மிக பிற்படுத்தப்பட்ட (எம்.பி.சி.) மற்றும் சீர்மரபினர் (டி.என்.சி.) மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு, மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக இருக்க கூடாது. மேலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் படிவங்களை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே பெற்று கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே கல்வி நிறுவனங்கள் புதுப்பித்த கல்வி உதவித்தொகைக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பித்து, ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.