தேர்தல் பறக்கும் படையினர் பாரபட்சமின்றி நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும்- கலெக்டர் அறிவுரை

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை கூறினார்.
கலெக்டர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
கலெக்டர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
Published on

விழுப்புரம்:

பாரபட்சமின்றி நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும் என்று தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 21 பறக்கும் படை குழுக்களும், ஒரு தொகுதிக்கு ஒரு குழு வீதம் 7 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து அரசு அலுவலர்களும், காவல்துறையை சேர்ந்தவர்களும் பாரபட்சமின்றி நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில் 24 மணி நேரமும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், வருமான வரித்துறை துணை ஆணையர் கமலாதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com