

சென்னை:
சென்னை கே.கே.நகர் பொன்னம்பலம் சாலையை சேர்ந்தவர் பிரீத்தி (வயது 31). இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திறந்துகிடந்த வீட்டிற்குள் புகுந்து பிரீத்தியிடம், இங்கு வீடு வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். வீடு வாடகைக்கு இல்லை என்று பிரீத்தி பதில் அளித்துள்ளார். திடீரென்று அந்த வாலிபர், பிரீத்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துள்ளார். பிரீத்தி சத்தம் போட்டுள்ளார். உடனே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரீத்தியின் வயிற்றில் குத்திவிட்டு, அந்த வாலிபர் தப்பியோடினார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, அந்த வாலிபரை பிடித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரது பெயர் பார்த்திபன் (30). கே.கே.நகர் பானு நகரை சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. காயமடைந்த பிரீத்தி, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.