

வடவள்ளி:
கோவை கோவில்மேடு தில்லை நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன்கள் ஆனந்த் (வயது 25), ஹரி (20). இருவரும் ஒர்க்ஷாப் தொழிலாளர்கள். இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் ஆனந்த், அவருடைய தம்பி ஹரி, அதே பகுதியை சேர்ந்த மதன் (23) ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் பேரூர் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு சாமி கும்பிட்டு விட்டு வரும் வழியில் அங்கு உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வரும் வழியில் பேரூர் ரோடு நாகராஜபுரத்தில் உள்ள கோளாராம்பதி குளத்தில் தாமரை பூக்கள் பூத்து குலுங்குவதை கண்டனர். குளத்தில் இறங்க பயந்து மதன் மட்டும் கரையில் நின்றதாக தெரிகிறது.
குளத்திற்குள் இறங்கிய ஆனந்த், ஹரி ஆகியோர் தாமரை பூக்களை பறித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆனந்த் திடீரென சேற்றில் சிக்கி மூழ்கினார். காப்பாற்ற முயன்ற ஹரியும் சேற்றில் சிக்கினார். இருவரையும் இறந்த நிலையில் தீயணைப்பு படையினர் மீட்டனர்.