

ஒரத்தநாடு, ஆக.5-
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டையில் நேற்று வீரனார்கோவில் கட்டுவதற்கு வி.ஏ.ஓ. மற்றும் சர்வேயர் ஆகியோர் அளவீடு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அதே தெருவை சேர்ந்த பழனிவேல் குடும்பத்தினர் மட்டும் கோவில் கட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பழனிவேல் மகன் சின்னராசா, நிசாந்த் ஆகிய இருவரும் சேர்ந்து அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த ஜெய்சங்கர், பாலா, முருகையன் மனைவி பானுமதி, மணி மனைவி ராஜாத்தி ஆகியோர் அளவீடு பணியை எதற்காக தடுக்கிறீர்கள் என தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சின்னராசா, நிசாந்த் ஆகிய 2 பேரும் மறைத்து வைத்திருந்த நீளமான வாளால் அங்கு நின்றவர்களை வெட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் இதனை ஓடிவந்து தடுத்தபோது அவர்களுக்கும் வெட்டு விழுந்தது.
மொத்தம் 7 பேருக்கு வெட்டு விழுந்தது. இந்த தாக்குதலில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். மற்ற 4 பேர் லேசான காயமடைந்தனர். இதையடுத்து பலத்த காயமடைந்த 3 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தகவல் அறிந்த ஒரத்தநாடு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னராசா, நிசாந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டுள்ளனர்.