ஹாங்காங் மக்களுக்கான சிறப்பு விசா திட்டத்தை தொடங்கியது இங்கிலாந்து

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு நேற்று தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்:

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்தபோது, அந்த பிராந்திய மக்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்ற உரிமையை 1997-ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹாங்காங்கில் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டில் 5 ஆண்டுகள் வசிப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு அண்மையில் அறிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறி இங்கிலாந்தை கண்டித்தது.

மேலும் ஹாங்காங் மக்களுக்கு இங்கிலாந்து வழங்கியிருந்த பாஸ்போர்ட் இனி செல்லாது எனவும் சீனா அறிவித்தது.‌

இந்த நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு நேற்று தொடங்கியது. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த புதிய விசாவைப் பெற விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இங்கிலாந்தின் குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டம் குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “இந்த நடவடிக்கை இங்கிலாந்தின் முன்னணி காலனியான ஹாங்காங்குடன் இங்கிலாந்தின் வரலாறு மற்றும் நட்பின் ஆழமான உறவுகளை கவுரவிக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com