

மணப்பாறை:
மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையின் ஒரு பகுதியில் கட்டிடங்கள் நிறைந்த இடத்தில் குரங்குகள் அதிக அளவில் தினமும் உலா வந்து கொண்டே இருக்கும்.
இந்தநிலையில் நேற்று ஒரு குரங்கு கட்டிடம் ஒன்றை கடந்து செல்ல தொலைபேசி வயரை பிடித்துச்சென்ற போது, அதன் வால் வயர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த குரங்கால் எங்கும் செல்ல முடியாமல் வலியால் துடித்தது.
இதைப்பார்த்த பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தொலைபேசி வயர்களை அப்புறப்படுத்தி குரங்கின் வாலை வெளியில் எடுத்து விட்டனர். இதையடுத்து அந்த குரங்கு அங்கிருந்து சென்றது.