வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கி கடனுதவி- கலெக்டர் தகவல்

குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கூறியதாவது:-

மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அதிகபட்சம் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதி உடையவர் ஆவர். சிறப்புப்பிரிவினரான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வரைதளர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டத்தின் கீழ் உற்பத்தித்தொழில்களுக்கு அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.15 லட்சமும் சேவை மற்றும் வியாபாரத்தொழில்களுக்குகளுக்கு அதிக பட்ச முதலீட்டுதொகை ரூ.5 லட்சமும் கடனுதவியாக வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 2.5 லட்சம் மானியமாக பெற்று பயனடையலாம். ஜவுளி வியாபாரம், பலசரக்கு மற்றும் அனைத்து வியாபாரம் சார்ந்த தொழில்கள் உள்பட சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கலாம். மேலும் கொரோனா காரணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்து நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். நடப்பு நிதியாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இதற்கான இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் விருதுநகர் (045 62 282 739,252 308) என்ற முகவரியில் அணுகி பயன் பெறலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com