இலங்கையை 103 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்காளதேசம் ஒருநாள் தொடரை வென்றது

இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
சதமடித்த முஷ்பிகுர் ரஹிம்
சதமடித்த முஷ்பிகுர் ரஹிம்
Published on

வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 48.1 ஓவர்களில் வங்காளதேசம் அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கடந்த போட்டியைப் போலவே அந்த அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி சதமடித்து 125 ரன்னில் ஆட்டமிழந்தார். மஹமதுல்லா 41 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் லித்தன் தாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா, லஷ்மண் சண்டகன் தலா 3 விக்கெட்டும், இசுரு உடானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. வங்காளதேச பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இலங்கை அணி 40 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 140  ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, டக்வொர்த் லுயிஸ் விதிப்படி வங்காளதேசம் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்காளதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன், முஷ்டபிசுர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com