

அரசூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரும்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு ஹரிணி (வயது 2) என்ற மகள் இருந்தாள். நேற்று மதியம் ஹரிணி தனது தாய் வித்யாவுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அருகில் உள்ள செடியில் பூப்பறிக்க சென்றபோது, பக்கத்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை ஹரிணி தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினாள்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.