திருட்டு
திருட்டு

அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் 35 மடிக்கணினிகள் திருட்டு

அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் 35 மடிக்கணினிகள் திருட்டு போயின. மற்றொரு பள்ளியிலும் மர்ம நபர்கள் கை வரிசை காட்டினர்.
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. தற்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வேதியியல் ஆய்வகத்தில் 35 மடிக்கணினிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மலையப்பன் வேதியியல் ஆய்வகத்திற்கு சென்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 35 மடிக்கணினிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் வேறொரு பூட்டு போடப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த மெக்கானிக்கல் பொருட்களை திருடி விட்டு வேறொரு பூட்டால் அந்த அறையை பூட்டி விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பள்ளிகளில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடசெல்வம் நேற்று அந்த பள்ளிகளின் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com