ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு - கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது

தர்மபுரியில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.
கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டபோது எடுத்த படம்.
கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டபோது எடுத்த படம்.
Published on

தர்மபுரி:

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று முதல் தொடங்கி வருகிற நவம்பர் மாதம் 1-ந்தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார்.

அப்போது, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.

எனவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியை கலெக்டர் வாசித்தார்.

அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பின் தொடர்ந்து வாசித்து ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர் உள்பட கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com