சின்னசேலம் ஏரியில் பழங்கால கொற்றவை கற்சிலை கண்டெடுப்பு

சின்னசேலம் ஏரியில் குடிமராமத்து பணி நடந்தபோதுபழங்கால கொற்றவை கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
பழங்கால கொற்றவை கற்சிலை
பழங்கால கொற்றவை கற்சிலை
Published on

சின்னசேலம்:

சின்னசேலம் ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏரியின் கிழக்கு கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு பழங்கால கொற்றவை கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை வரலாற்று ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பொன்வெங்கடேசன் என்பவர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

13-ம் நூற்றாண்டில் இப்பகுதியானது மகதை நாட்டில் இருந்துள்ளது. மகதை மன்னர் பொன்பரப்பி வாணகோவரையன் என்பவர் இப்பகுதியை ஆண்டுவந்த காலத்தில், இந்த கொற்றவை சிலை செய்யப்பட்டு இருக்கலாம். பல்லவர் கால முறையை பின்பற்றி உள்ளூர் சிற்பிகள் மூலம், சிலை செய்யப்பட்டு இருக்கலாம். சிலையின் உயரம் 83 செ.மீ, அகலம் 73 செ.மீ ஆகும். எட்டுகரங்களுடன் நீண்ட மகுடம், காதுகளில் பத்ரகுண்டலம், கழுத்தில் சரபளி, சவடி போன்ற அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக கொற்றவையின் வயிறு ஒட்டிய நிலையில் இருக்கும். ஆனால் இது சற்று பெரிதாக காட்டப்பட்டுள்ளது. வலதுகால் நேராகவும், இடதுகால் சற்று மடித்த நிலையிலும் உள்ளது.

பல்லவர்கால கொற்றவையில் காணப்படும் மானும், சிங்கமும் இந்த சிலையில் இருப்பது சிறப்பான ஒன்றாகும். கொற்றவையின் வாகனமான மான் வலதுபுறம் உள்ளது. மேலும் இப்பகுதியை ஆய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுத்தடயங்கள் கிடைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com