அம்மாபாளையத்தில் டிரைவர் வீட்டில் பணம்- டிவி திருட்டு

அம்மாபாளையத்தில் டிரைவர் வீட்டில் பணம் மற்றும் டி.வி.யை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் மெயின்ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செல்லபாண்டி(வயது 47). டிரைவர். இவருடைய மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகள்களும், கலையரசன்(16) என்ற மகனும் உள்ளனர். செல்லபாண்டி நேற்று முன்தினம் தனது அண்ணன் சுந்தரத்துடன் ஜவுளி வியாபாரத்துக்கு வெளியூர் சென்று விட்டார். இந்திரா, திருச்சி கருமண்டபத்தில் வசித்து வரும் தனது 2-வது மகளான சித்ராதேவியின் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த கலையரசன் இரவு 11 மணியளவில் வீட்டின் கதவுகளை பூட்டாமல் சாத்தி விட்டு, வெளியே இரும்பு கேட்டை மட்டும் பூட்டிவிட்டு அருகே உள்ள அவருடைய மாமாவான ராஜா வீட்டிற்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு விட்டு, அங்கேயே கலையரசன் தூங்கி விட்டார்.

இந்நிலையில் நேற்று காலை கலையரசன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் சுவரில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டதாக கலையரசன் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் பணம் மற்றும் டி.வி. ஆகியவை மட்டும் திருட்டு போயிருப்பதாகவும், வீட்டில் நகை இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com