பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகம்- அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியங்களை உருவாக்க மத்திய அரசு ரூ. 195 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பிரன்சில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
வீடியோ கான்பிரன்சில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Published on

மணிப்பூர், தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் ராணி கைடின்லியு பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பழங்குடியினர் நல விவகார அமைச்சகம் ரூ.15 கோடி நிதி ஒதுக்கி அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-

இந்தியாவின் சுதந்திரத்தில் பழங்குடியின மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் நகர்ப்புற மக்களுக்குத் தெரியாது.  அதனால்தான் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற அருங்காட்சியகங்களை உருவாக்க முடிவு செய்தார். இதற்காக மத்திய அரசு ரூ.195 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதில், ரூ.110 கோடி  வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம், நமது சமூகத்தை ஒருங்கிணைக்க உதவும்.

குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் கட்டப்படும். இது தேசபக்தியை வளர்க்கும். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com