மும்பை தாக்குதல் நினைவு தினம்- அமித் ஷா, ஆளுநர் பகத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி

மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி
Published on

மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அன்று பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட இடங்கள் வெடித்து சிதறின. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 166 பேர் உயிரிழந்தனர்.

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில், "மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள். கோழைத்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, தைரியமாக எதிர்கொண்ட அனைத்து பாதுகாப்பு வீரர்களுக்கும் வீர வணக்கம். உங்கள் துணிச்சலைக் கண்டு ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்படுகிறது. உங்கள் தியாகத்திற்கு தேசம் எப்போதும் நன்றியுடன் கடமைப்பட்டிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, துணை முதல்வர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோர் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com