

திங்கள்சந்தை:
குருந்தன்கோடு அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40). இவர் வெள்ளிமலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து திங்கள்சந்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
புதுவிளை என்ற பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சுவரில் மோதியது. இதில் அய்யப்பன்
சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக
அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த அய்யப்பனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் பேரூராட்சி ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.