அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் 22-ந் தேதி தொடங்குகிறது

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் 22-ந் தேதி தொடங்குகிறது.
ஆதார் அட்டை
ஆதார் அட்டை
Published on

திருச்சி:

திருச்சி மத்திய அஞ்சல் மண்டலத்தில் 373 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் கடந்த (2020) செப்டம்பர் மாதம் முதல் சேவை நடைபெற்று வருகிறது.

பொது மக்கள் ஆதார் அட்டையை புதிதாக விண்ணப்பிக்கவும் மேலும் ஆதாரில் திருத்தம் செய்யவும் சிறப்பு மேளா தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் வருகிற 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சிறப்பு முகாமின்போது பின்வரும் சேவைகளை பொது மக்கள் பெறலாம். ஆதார் பதிதல் கட்டணம் கிடையாது. 15 வயது நிரம்பியவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் திருத்தம் கட்டணம் கிடையாது.

பெயர், முகவரி, செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை திருத்த ரூ.50-ம், பயோமெட்ரிக் அப்டேஷனுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்.

குழந்தைகளுக்கு ஆதார் பதியும்போது தாய் அல்லது தந்தையின் அடையாள சான்று, இருப்பிட சான்று, குழந்தையின் பிறப்பு சான்று கொண்டு வரவேண்டும். செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி திருத்தத்திற்கு எந்த சான்றும் தேவையில்லை. மற்ற திருத்தங்களுக்கு தகுந்த சான்றுகளை கொண்டு வரவேண்டும்.

செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலை https://uidai.gov.in/images/commdoc/valid-documents-list.pdf என்ற இணையதளத்தில் மூலம் அறியலாம். இச்சிறப்பு முகாம் வாடிக்கையாளர் சேவைக்காக 0431-2419707 என்ற தொலைபேசி எண் மண்டல அளவில் நிறுவப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்தில் இயங்கி வரும் அஞ்சல் ஆதார் சேவை மையங்களை https://cutt.ly/Eklncwk என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம். பொது மக்கள் இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்து கொள்ளுமாறு திருச்சி மண்டல அஞ்சல் துறைத்தலைவர் கோவிந்தராஜன் கேட்டுக்கொள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com